ஹம்பி – தேவாங்கருக்கான தெய்வீக நோக்கிடை
“பரம்பொருளின் நிழலில் அமைந்த ஆன்மிக மையம் – ஹம்பி ஹேமகூட்ட காயத்ரி பீடம்”
ஒவ்வொரு தேவாங்கரும் வாழ்நாளில் ஒருமுறையாவது ஹம்பிக்கு செல்ல வேண்டியதற்கான ஆன்மிக காரணங்கள்.
ஹம்பி – வரலாற்றில் அழியாத பொக்கிஷம்
கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஹம்பி, உலக புகழ்பெற்ற யுனெஸ்கோ பாரம்பரியத் தளம் என அழைக்கப்படும் இடமாகும். இது ஒரு காலத்தில் உலகத்தின் மிக செல்வ செழிப்பு மிக்க சாம்ராஜ்யத்தின் தலைநகரம் ஆக விளங்கியது. கி.பி. 14–16ஆம் நூற்றாண்டுகளில் அரசியல், ஆன்மிகம், கல்வி, கலை, பண்பாடு மற்றும் வர்த்தகத்தில் மாபெரும் வளர்ச்சியடைந்த இடமாக ஹம்பி இருந்தது.
இங்கு கட்டிடக் கலையின் உச்சத்தைத் தோன்றவைக்கும் கோயில்கள், மண்டபங்கள், ரதங்கள், மற்றும் கலை செதுக்கப்பட்ட பாறைகள் காணப்படுகிறது. விருப்பாச்சேசுவரர் கோயில், விஜய விட்டலர் கோயில், ஹஜாரராம கோயில், ராணியின் குளம், லிங்கம் கோயில், மஹாநவமி டிப்பா, மற்றும் ஹேமகூட்ட மலையணைகள் போன்றவை மிகவும் பிரசித்திபெற்றவை.
முக்கிய இடங்கள்:
ஹேமகூடா மலை – பல பழமையான ஜெயின மற்றும் சிவன் கோவில்கள் உள்ள இடம். இங்கு தான் காயத்ரி பீடமும் அமைந்துள்ளது.
விட்டலர் கோவில் (Vittala Temple) – இசை பாறைகள் (musical pillars) மற்றும் ரதம் (stone chariot) இங்கு காணக்கூடிய முக்கிய கலைச் சின்னங்கள்.
விருப்பாச்சேசுவரர் ஆலயம் – மிகப்பெரிய சிவன் கோவில். காலை நேர சூரிய ஒளியில் கோபுரத்தில் விழும் ஒளிக்கதிர்கள் கம்பீரமான அனுபவத்தை தருகின்றன.
அச்சுதராயர் கோவில், மஹாநவமி டிபி, லோட்டஸ் மஹால், எலிபண்ட் ஸ்டேபிள், கிங்ஸ் பேலஸ் போன்ற பல அரண்மனைகள் மற்றும் நினைவுச்சின்னங்கள் பார்வையிட வேண்டியவை.
புனித நதியின் பாசம்:
துங்கபத்ரா நதி ஹம்பியின் கரையில் பெருமிதமாக ஒலிக்கிறது. இதன் கரையோரமே ஆன்மிகத்தில் மூழ்கவைக்கும் ஹேமகூடா காயத்ரி பீடம் உள்ளது.
ஹேமகூட்ட காயத்ரி பீடம் – தேவாங்க குலத்தின் ஆன்மிக ஒளிக்கிழாய்
ஹம்பியின் ஹேமகூட்ட மலைத் தளத்தில், துங்கபத்திரா நதிக்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ காயத்ரி பீடம். இது ஒரு சாதாரண இடமல்ல, நம் தேவாங்க சமூகத்தின் ஆன்மிகத் தாய் மடம் என்றே கூறலாம். விஜயநகர காலத்தில் அப்பொழுது இருந்த அரசர் பொரும் மதிப்புடன் பல கொடைகள் வழங்கியும், பட்டயங்கள் வழங்கியும் சிறப்பித்துள்ளார்.
200 ஆண்டுகள் தொல்லியல்துறையின் கீழ் இருந்த இந்த பீடம், நமது ஜகத்குருவான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயானந்தபுரி சுவாமிஜி அவர்களின் பெரும் முயற்சியில் மீள் உயிர் பெற்று பீடம் முழுவதும் நவீனமயமாக கட்டியமைக்கப்பட்டு, தேவாங்க மக்களுக்கு அமைதியான ஆன்மீக தேடலுக்கான, அண்ணை ஸ்ரீ சௌடேஸ்வரி தேவி, காயத்திரி தேவி, ராமலிங்கேஸ்வரர் மற்றும் நமது குல குரு ஹம்பி ஹேம கூட காயத்ரி பீட ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தாயானந்தபுரி ஸ்வாமிகளின் அருளாசியும், பரிபூரண தெய்வ கடாச்சம் கிடைக்கும் ஒரு ஆன்மிகமிக்க இடமாக மாறியுள்ளது.
பீடத்தில் உள்ள தெய்வங்கள்:
ஸ்ரீ ராமலிங்கர் சுவாமி
ஸ்ரீ சௌடேஸ்வரி தாயார்
ஸ்ரீ காயத்ரி தேவி
இங்கு தினமும் வழிபாடுகள் நடக்கின்றன. ஆண்டுதோறும் நவராத்திரி, கார்த்திகை தீபம், குருபூர்ணிமா, பட்டாபிஷேக விழா எனப் பல ஆன்மிக நிகழ்ச்சிகள் மிக விமரிசையாக நடைபெறும்.
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயானந்தபுரி சுவாமிஜி – தேவாங்க மக்களுக்கு ஆன்மிக விளக்கேற்றிய அருந்தவஞானி
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயானந்தபுரி சுவாமிஜி அவர்கள் நம் தேவாங்க குலத்தின் ஆன்மிகத் குல குரு மட்டுமல்லாமல், ஆன்மீக தேடலிலிருக்கும் அனைத்து மக்களுக்கும் ஆன்மீக வழிநடத்தும் ஒரு கருணைமிகு ஞானகுரு. அவர்களின் வழிகாட்டுதலால், ஸ்ரீ காயத்ரி தேவி, ஸ்ரீ சௌடேஸ்வரி தேவி மற்றும் ஸ்ரீ ராமலிங்கர் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் தவறாது இப்பீடத்தில் தினந்தோறும் பூஜை செய்யப்படுகிறது.
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயானந்தபுரி ஸ்வாமிகள் ஹம்பி காயத்ரி பீடத்திலிருக்கும் போதேல்லாம், உலகம் முழுவதும் பரந்துள்ள நம் தேவாங்க மக்களின் நல்வாழ்வுக்காக தினமும் செய்யும் தியானம், ஜெபங்களளோடு பீடத்தில் வீற்றிருக்கும் தெய்வங்களுக்கு பூஜைகளை செய்து வருகிறார்கள். அவரது தலைமையில் ஆண்டு முழுவதும் நவராத்திரி, கார்த்திகை தீபம் பல ஆன்மிக விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. ஹம்பி மடத்தில் நடைபெறும் பூஜைகளும், விழாக்கள் அனைத்தும் நம் தேவாங்க சமுதாய வளர்ச்சியையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் பெருமைமிகு நிகழ்வுகள் ஆகும்.
முத்துசங்க மாமுனிவர் மற்றும் பணிகௌடர் வாழ்ந்த புனித மலைக் குகை
ஹம்பிக்கு அருகிலுள்ள ரெய்ச்சூர் மாவட்டம் கங்காவதி தாலுகாவில் அமைந்துள்ள மழை மல்லப்பா மலைக் குகை, நம் ஆன்மிக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். இங்கு முத்துசங்க மகா முனிவர் தவம் செய்ததாகவும், அவரால் நடப்பட்ட அரசமரம் இன்று வரை உயிருடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுவே நமது தர்ம ஸ்தாபகர் பணிகௌடர் வாழ்ந்த இடமாகவும் வரலாற்று ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. ஹம்பி ஹேமகூட்ட பீடத்திலிருந்து இக்குகைக்கு ஒரு நேரில் செல்லும் பாதை இருந்ததாகவும், ஆனால் தற்போது அது மூடப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஹம்பி புனித தலம் – ஒவ்வொரு தேவாங்கரின் ஆன்மிகக் கடமை. ஹம்பி மற்றும் ஹேமகூட்ட ஸ்ரீ காயத்ரி பீடம் என்பது தேவாங்க சமுதாயத்துக்கே உரித்தான ஒரு பெருமை. இது ஒரு வரலாற்று அடையாளம் மட்டுமல்ல, நம் ஆன்மிக மரபுகளின் பரிணாமமாகும். ஒவ்வொரு தேவாங்கரும் வாழ்நாளில் குறைந்தது ஒருமுறை இங்கு சென்று தரிசிக்க வேண்டும்.
இது நம் குலதெய்வங்களை நினைவு கூரும் இடமாகவும், நம் ஆன்மீகத்தின் மூலங்களை அடையும் வாய்ப்புக்கான இடமாகவும், முந்தய நம் பல குருமார்களும் தற்போதய குல குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயானந்தபுரி ஸ்வாமிகளின் பாதம் பட்ட இந்த புனித இடம் நம் பாவங்களை அணைத்தையும் போக்கி நம் வாழ்வில் நாம் வேண்டும் அனைத்து செல்வங்களையும் மேன்மைகளையும் அள்ளித்தரும் தேவாங்கருக்கான ஒரு புனிதம் மிக்க இடமாக விளங்குகிறது.
நம் வாழ்வில் நாமும் ஒருமுறையாவது ஹம்பி தேவாங்க மடத்திற்கு நம் குடும்பத்துடன் சென்று அருள் பெருவோம்.
No comments:
Post a Comment